politics

img

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்கச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது. செந்தில் பாலாஜியிடம் ஐந்து நாட்கள் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் எம்.எல்.ஏ., எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரின் நீதிமன்ற காவலை வரும் 28-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 28-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறைதுறைக்கு நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.